யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் துப்பாக்கிமுனையில் பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்ட நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அவரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினம் (25) சனிக்கிழமை யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பாக ஏற்பட்ட தகராறே இதற்குக் காரணமாகும்.
குறித்த காணியை பாராளுமன்ற உறுப்பினர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அந்த காணி தமக்குச் சொந்தமானது என உரிமை கோரியுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி ஒரு பெண்ணை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட காணியின் உரிமை தொடர்பாக ஏற்கனவே நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அந்த காணி தனக்குரியது என உரிமை கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பு அதனை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
