தற்போதுள்ள ரயில்வே கட்டமைப்புக்கு இணையாக மின்சார ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இன்று (29) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ரயில் சேவைகளை நவீனமயமாக்குவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதுள்ள அகலப் பாதை (Broad gauge) முறைமைக்குப் பதிலாக, சர்வதேச தரத்திலான தரப்படுத்தப்பட்ட பாதை (Standard gauge) முறைமைக்கு மாற்றுவது உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கான நிதி ஏற்பாடுகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்து அதிகாரிகள் மீளாய்வு செய்தனர்.
இத்திட்டத்தின் பணிகளை அடுத்த ஆண்டு (2027) முற்பகுதியில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
