காலி புதிய கொக்கல சுதந்திர வர்த்தக மையத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆடைத் தொழிலாளி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மற்றொரு ஆடைத் தொழிலாளி காயமடைந்து காலி, கரபிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹபரடுவ பகுதி கொக்வத்த, எண் 72/A இல் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று (03) அதிகாலை 12.30 மணியளவில், கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் அந்த வீட்டின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இந்த இரண்டு ஆடைத் தொழிலாளர்களும், 1990 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஒரு ஆடைத் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மற்றொரு ஆடைத் தொழிலாளி தீக்காயங்களுடன் காலி கரபிட்டிய தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்னல் தாக்கியதில் உயிரிழந்த ஆடைத் தொழிலாளி இமாஷா மதுபாஷினி திவன்ஷா (26) எனவும் காயமடைந்தவர் ஜி.ஏ. பியமதி (25) என்ற தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது
