மட்டக்களப்பு, பயனியர் வீதியில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்தில், கலை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் மாயச்சித்திரக் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கோலாகலமாக ஆரம்பமானது.
இக்கண்காட்சியினை கனேடிய உயர் ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா (Martin Isabella) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த கண்காட்சியானது வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் வளாகத்தில் 3 தினங்கள் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜி.பிரணவன்,கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் பிரியதர்சன்,மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சியானது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்துவதோடு, கலை மூலமாக சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் வருகை தந்து மாயச்சித்திரக் கலை நுணுக்கங்களை வியப்புடன் கண்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கண்காட்சியை பார்வையிட்ட அதிதிகள் அதனை வரைவதற்கான பிரதான செயற்பாட்டாளராகயிருந்தவரையும் கௌரவித்ததுடன் சமாதான பூங்காவின் செயற்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கனடிய தூதுவர்,
இந்த நிறுவனம் தனது 30-வது ஆண்டு மைல்கல்லைக் குறித்து புதியதொரு தசாப்தத்திற்குள் நுழையும் வேளையில், உங்களின் பணி முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
இந்த பூங்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் உறவை நான் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன். இதில் கனடா அரசின் கடந்த கால ஆதரவுகளும், மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்துடனான தொடர்புகளும் அடங்கும்.
கனடா அரசின் சார்பில் எங்களது ஆதரவு நிச்சயமாகத் தொடரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டுவதுடன், நல்லிணக்கத்தையும் இணக்கத்தையும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். மக்களிடையேயான பிணைப்பே நீடித்த கூட்டாண்மைக்கு அடிப்படையாகும். இந்த அணுகுமுறைக்கு பங்களிப்பதில் கனடா பெருமிதம் கொள்கிறது.இதற்கான ஆதரவினை கனடா தொடர்ந்து வழங்கும் குறிப்பிட்டார்.
