இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பாவிக்கப்பட்ட வாகனங்களுக்கான 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பு நீக்கப்படுமாக இருந்தால், சந்தையிலுள்ள வாகனங்களின் விலைகள் தற்போதைய நிலையை விடவும் பன்மடங்கு அதிகரித்து நுகர்வோரை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவரும் ஊடகப் பேச்சாளருமான அரோஷ ரொட்ரிகோ எச்சரித்துள்ளார்
இவ்விடயம் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகியோர் விசேட கவனம் செலுத்தி, தற்போது நடைமுறையிலுள்ள 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (17) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பை நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகின்றது. ஏற்கனவே வாகன இறக்குமதிக்காக நாம் அளவுக்கு அதிகமான வரிகளைச் செலுத்தி வருகின்றோம். இந்நிலையில், இந்த 15 சதவீத குறைப்பும் நீக்கப்பட்டால் நுகர்வோருக்குப் பாரிய அநீதி இழைக்கப்படும்.
கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வாகன இறக்குமதித் துறை மீது தொடர்ச்சியான வரிச்சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த மே மாதம் 01 ஆம் திகதி சொகுசு வரி அதிகரிக்கப்பட்டதுடன், மே மாதம் 15 ஆம் திகதி முதல் சுங்கத் திணைக்களத்தினால் 150 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றின் பெறுமதிகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. இந்த அனைத்து வரி அதிகரிப்புகளுடனும் சேர்த்து, தற்போது இந்த 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பும் நீக்கப்படுமாக இருந்தால், சந்தையில் சாதாரண நுகர்வோரால் ஒரு வாகனத்தைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.
உதாரணமாக, சந்தையில் தற்போது 70 முதல் 75 இலட்சம் ரூபா வரை விற்பனை செய்யப்படும் சுஸுகி வேகன் ஆர் ரக வாகனத்தின் விலை, இந்தத் தீர்மானத்தால் மேலும் 7 இலட்சம் ரூபாவினால் அதிகரித்து சுமார் 85 இலட்சம் ரூபாவைத் தொடும் அபாயம் காணப்படுகின்றது.
அதேபோன்று, ஹொண்டா வெசல் ரக வாகனத்தின் விலை சுமார் 20 இலட்சம் ரூபாவினால் அதிகரித்து, அதன் மொத்த விலை 2 கோடி ரூபாயையும் தாண்டிச் செல்லும் நிலை ஏற்படும். டொயோட்டா யாரில் போன்ற வாகனங்களின் விலைகளும் பல இலட்ச ரூபாவினால் அதிகரிக்கும்.
அடுத்ததாக, வாகனங்களுக்கான தேய்மான மதிப்பு கணக்கிடப்படாமை குறித்தும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணமாக, நாம் வெளிநாடுகளில் இருந்து 10 வருடங்கள் பழமையான குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றினை 20 அல்லது 30 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்தாலும், சுங்கத் திணைக்களம் அதன் புதிய வாகனத்தின் மதிப்பான 1 கோடியே 20 இலட்சம் ரூபாவை அடிப்படையாகக் கொண்டே சுங்கத் தீர்வையை கணக்கிடுகின்றது.
ஆண்டுதோறும் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்களின் தேய்மானத்தைக் கணக்கிட்டு சுங்கத் தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்ற நியதி இருந்தும், அது எமக்கு வழங்கப்படுவதில்லை. முறையான வழிமுறையின்படி, எமக்கு வழங்கப்படும் இந்த 15 சதவீத தள்ளுபடிக்கு மேலதிகமாக முறையான தேய்மான மதிப்புக் குறைப்பும் வழங்கப்பட வேண்டும்.
இந்த 15 சதவீத பெறுமதி குறைப்பு நீக்கப்பட்டால், புதிய வாகனங்களுக்கும் பாவிக்கப்பட்ட வாகனங்களுக்கும் இடையிலான விலை இடைவெளி இல்லாது ஒழிந்து, நுகர்வோர் குறைந்த விலையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு முழுமையாக அற்றுப்போகும். இதுகுறித்து நாம் நிதி அமைச்சுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, எமது நியாயமான கோரிக்கைகளை விளக்கியுள்ள போதிலும், இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறைந்தது இந்த 15 சதவீத சுங்கப் பெறுமதி குறைப்பையாவது தொடர்ந்தும் பராமரித்துச் செல்ல அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடமும் நிதி அமைச்சிடமும் அவசரமாகக் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
