இலங்கையில் பெருமளவிலான மக்கள் ரயில் சேவையை விடவும் பேருந்து சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், இன்றுவரை ஒரு தூரப் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட முடியாத ஒரு சூழலே நிலவுகிறது. இவ்வாறான நிச்சயமற்ற நிலையை மாற்றி, கௌரவமான பயணத்தை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும். எனவே தான் தூர இடங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் இனிமேல் தமது ஆசனங்களை வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யும் இணையத்தள வசதியை நாம் அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் பயணிகள் பேருந்து நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும், பாராளுமன்றச் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விசேட செயற்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (04) கொழும்பில் நடைபெற்றது. மேலும் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நிலவும் முறைசாரா முன்பதிவு முறைகளால் பயணிகள் கடும் நிதிச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒரு சாதாரண பயணச்சீட்டுக்கு மேலதிகமாக 400 முதல் 500 ரூபாய் வரை கமிஷன் என்ற பெயரில் இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுவதை நாம் அவதானித்துள்ளோம். உதாரணமாக, 800 ரூபாய் பெறுமதியான பயணச்சீட்டுக்கு 1200 ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.busticket.gov.lk இணையத்தளம் இவ்வாறான சுரண்டல்களைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நியாயமான கட்டணத்தை உறுதிப்படுத்தும். நீங்கள் முன்பதிவு செய்யும் பயணச்சீட்டில் இருந்து வெறுமனே 30 ரூபா மாத்திரமே மேலதிகமாக செலுத்த வேண்டி வரும். வங்கி கணக்கு அட்டைகளில் பணம் செலுத்தியும் ஆசனங்களை முன்பதிவு செய்யலாம்.
இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகள் என அனைத்தையும் ஒரே இணையத்தளக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு முனைகிறோம். பயணிகள் வெவ்வேறு இடங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறைமையின் மூலம், பேருந்து புறப்படுவதற்குச் சற்று முன்னர் நிலையத்திற்குச் சென்றால் போதுமானது. ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு பேருந்து வராமல் போனால், பயணிகளுக்கு அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் வசதியும் இதில் உள்ளது.
மக்கள் தூரப் பயணங்களின் போது ஆசனங்களை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் கொண்டு வரும் மேலதிக பொதிகள் மற்றும் பொருட்களும் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதுவரை நிலவி வந்த முறைசாரா பொதி போக்குவரத்து முறையை மாற்றி, சரியான அளவு மற்றும் எடைக்கு ஏற்ப தரப்படுத்தப்பட்ட கட்டண முறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த புதிய முறைமை பயணிகளுக்கு மட்டுமல்லாது, பேருந்து உரிமையாளர்களுக்கும் பாரிய நன்மையைத் தரும். அவர்கள் தமது பேருந்தில் எத்தனை பயணிகள் வருவார்கள், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இது ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையிலான தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்க்க உதவும்.
இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமானால், மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். பயணிகள் இனிமேல் மூட்டை முடிச்சுகளுடன் பேருந்து நிலையங்களுக்கு வந்து ஆசனங்களுக்காகப் போராட வேண்டாம். www.busticket.gov.lk ஊடாக தமது பயணங்களை வீட்டிலிருந்தே உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தத் திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்ல ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
