கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற பாரிய கட்டிட அனர்த்தத்தில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இறுதி வருட மாணவிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நிறுவகத்தின் மாடிக் கட்டிடமொன்றில் இறுதியாண்டு மாணவிகள் வழமை போல் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேல்தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து அவர்கள் மீது வீழ்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த மாணவிகள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் இக்கட்டிடம் ஒரு மாடித் தொகுதியாக நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது. எனினும் அதன் கீழ் பகுதி மாத்திரம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.
கட்டிடம் பாதுகாப்பானது அல்ல என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் மாணவர்களின் பாவனைக்காக இது திறந்து விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறித்த கட்டிடத்தின் நிர்மாணத் தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மை தொடர்பாக ஏற்கனவே பல சர்ச்சைகள் எழுந்திருந்தன.
இந்த இழுபறிகளுக்கு மத்தியில் இக்கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த பொறியியலாளர் தனது பதவியை முன்னரே இராஜினாமா செய்திருந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தரமற்ற நிர்மாணப் பணிகளினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக மாணவர் அமைப்புகளும் பெற்றோர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகமும் உரிய அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
