மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த சிறுவனுக்கு வாயில் குறுக்கால் கம்பியால் சூடு வைத்த தந்தையாரை இன்று வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 3ம் தரத்தில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து , சிறுவனின் தந்தை மகன் மீது கோபங் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (26) மகனை பிடித்து இரும்பு கம்பியை சூடாக்கி அவரது வாயில் செங்குத்தாக சூடு வைத்துள்ளார்.
இவ்வாறு சிறுவனுக்கு நடந்த கொடூரம் அந்த பகுதி கிராம உத்தியோகத்தருக்கு தெரிய வந்த நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (28) முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் சிறுவனின் தந்தையை கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
