எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை(BCB) தேர்தலுக்கு முன்னதாக, அதன் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு இன்று டாக்கா வந்தடைந்துள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சபையின் முகமது மூசாஜீ மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் தவெங்வா முகுஹ்லானி ஆகிய இருவரே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்தல் நடைமுறைகள் உள்ளிட்ட பங்களாதேஷின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர்கள் ஆராயவுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அமினுல் இஸ்லாம் தலைமையிலான முந்தைய வாரியத்தை தேசிய விளையாட்டு கவுன்சில் (NSC) கலைத்தது.
அதன்பின்னர், தற்போது தமிம் இக்பால் தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிகக் குழுவே பிசிபியை நிர்வகித்து வருகிறது.
இந்த தற்காலிகக் குழு அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை ஒப்படைக்கக் கடமைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
