இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடல் எல்லையை உள்ளடக்கிய வகையில் முன்னெடுத்த விசேடsearch நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களுடன், அவர்கள் பயன்படுத்திய 8 டிங்கி படகுகள், 2 கனோய் (Canoe) படகுகள் மற்றும் 4 டிராக்டர்கள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக, அவர்களிடமிருந்த சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள், வர்த்தக ரீதியிலான வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றைத் தமது பொறுப்பில் எடுப்பதற்குக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் வடக்கு கடற்படைக் கட்டளைகளினால் திருகோணமலை, பனிச்சங்கேணி, சோபா தீவு, பொல்மல்குடா, கிண்ணியா, சூடைக்குடா, ஓட்டமாவடி, அளம்பில், புதுவக்கட்டு மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் ஏனைய பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு, கொட்பே, மூதூர், வாழைச்சேனை, குச்சவெளி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் திணைக்கள அலுவலகங்களிலும், புல்மோட்டை பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைப்பதற்குக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
