சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்கள் கொண்ட விசேட தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் இன்று (08) காலை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
இதற்கான தொடக்க நிகழ்வு கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு கொழும்பு மேயர் வ்ராய் கெலி பால்தசார், மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் கே. ஸ்ரீபிரதாபன் மற்றும் தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர ஆகியோர் தலைமை வகித்தனர்.
இன்று முதல் ஜூன் 10 ஆம் திகதி வரை 14 மாவட்டங்களிலும், 72 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளையும் மையமாகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மத வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள் மற்றும் கைவிடப்பட்ட வெற்று நிலங்கள் உள்ளிட்ட அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியவர்களுக்கு எதிராக Red Notice பிறப்பிக்கப்படவுள்ளதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதேபோல், அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் புகைமூட்டும் (Fumigation) நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் இடர் மேலாண்மை பிரிவு தினசரி மதிப்பீடு செய்து, அதற்கான அறிக்கைகள் ஊடகங்களுக்கு நாள்தோறும் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
