இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழர் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு தன்னால் இயன்ற அளவில் தொடர்ந்து பங்களிப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனிடம் உறுதியளித்துள்ளார்.
எஸ். சிறிதரன் மற்றும் சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றத்திற்காக வழங்கிய பங்களிப்புகளுக்காக சுவிட்ஸர்லாந்து தூதுவருக்கு சிறிதரன் நன்றி தெரிவித்ததுடன், நினைவுப் பரிசொன்றையும் வழங்கி கௌரவித்தார்.
மேலும், தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வை எட்டும் நோக்கில் தனது பதவிக்காலத்தில் தூதுவர் சிரி வோல்ற் முன்னெடுத்த சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை சிறிதரன் நினைவுகூர்ந்தார்.
இதற்கு பதிலளித்த தூதுவர், இலங்கையில் தனது சேவைக்காலம் முடிவடைந்த பின்னரும், தமிழர் இனப்பிரச்சினைக்கு நீதியான அரசியல் தீர்வை அடையும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவும் பங்களிப்பும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
