உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் உலகளவில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வது மற்றும் அதற்கான முன்னாயுத்த நடவடிக்கைகள் குறித்த உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் விசேட கூட்டம், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் திங்கட்கிழமை (8) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது எல்-நினோ நிலைமையினால் நாட்டின் விவசாயத் துறைக்கு ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தல் மற்றும் குடிநீரைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியதுடன், இறுதித் திட்டங்களைத் தயாரிப்பதற்காக, உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
