பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான 20வது உலக அமைதி குறியீட்டு (GPI) அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் அமைதித் தன்மையில் அதிக சதவீத முன்னேற்றத்தைப் பதிவு செய்த நாடாக இலங்கைத் திகழ்கிறது.
உலகளவில் 67வது இடத்துக்கு முன்னேறியுள்ள இலங்கை, தெற்காசியாவில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக அமைதியான நாடாக இடம்பிடித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டில் 163 நாடுகளில் இலங்கை 97வது இடத்தில் இருந்தது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மொத்த அமைதி மதிப்பெண் 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக இராணுவமயமாக்கல் தொடர்பான பிரிவில் 6.4 சதவீத முன்னேற்றமும், ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான நிதி பங்களிப்பு குறியீட்டில் 40.8 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது. மேலும், அரசியல் ஸ்திரமின்மை 25 சதவீதம் குறைந்ததன் காரணமாக பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பிரிவிலும் 1.8 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலகளாவிய அளவில் அமைதித் தன்மை சராசரியாக 0.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 18 ஆண்டுகளில் 15வது முறையாகவும், தொடர்ச்சியாக 12வது ஆண்டாகவும் உலக அமைதி நிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் உலக அமைதி குறியீடு வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது 119 நாடுகள் அப்போது இருந்ததை விட குறைந்த அமைதியுடன் காணப்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டில் 99 நாடுகள் அமைதித் தரத்தில் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், 62 நாடுகள் மட்டுமே முன்னேற்றம் கண்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
