அரச கடன்களைத் தீர்ப்பதற்காக திறைசேரியின் வசம் இருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல்போனமை தொடர்பாக நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆராய்வதற்காக, அரச நிதி பற்றிய குழு (COPF) இந்த வாரம் (08) நாடாளுமன்றத்தில் கூடியது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவின் (CERT) அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் போது, நிதி அமைச்சின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த பின்னர், இது தொடர்பான தனிப்பட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக மத்திய வங்கி அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
இரு அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இவ்வமர்வில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பாலிஹேன, சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
