ஒரு மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட உயிர்மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் இன்று (16) செவ்வாய்க்கிழமை சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்குட்பட்ட உயிர் மருத்துவ பொறியியல் சேவை மத்திய நிலையம் 501 மில்லியன் ரூபாவுக்கும் அதிக செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மீள புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிறிவு இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளதுடன், மாகாண அலகுகளுக்கான உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு நிகழ்வும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.
கொரியா சர்வதேச சுகாதார சேவை அறக்கட்டளையின் நிதி உதவியின் கீழ் இந்த நவீனமயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த திட்டத்தின் கீழ், மத்திய, வடமத்திய, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாண சபைகளின் கீழ் உள்ள உயிர் மருத்துவ பொறியியல் சேவை அலகுகளுக்கு 228 மில்லியன் ரூபா செலவிலான மருத்துவப் பரிசோதனை மற்றும் பழுதுபார்ப்பு உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் கலாநிதி ஹன்சக்க விஜேமுனி, இலங்கைக்கான கொரியக் குடியரசு தூதுவர் மியோன் லீ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப மற்றும் விநியோக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பிரிவினூடாக பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சிகளையும் வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
