ஏறாவூரில் வீதியில் தனியாக சென்ற 16 வயது சிறுவனை கடத்திச்சென்று தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, 16 வயதுடைய சிறுவன் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (15) கைது செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
ஏறாவூர், சவுக்கடி தளவாய் பிரதேசத்தில் 15,16,17 வயதுடைய சிறுவர்களை கொண்ட 3 வாள்வெட்டு குழுக்களை அந்த பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இயக்கி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த குழுக்கள் மோட்டார் சைக்கிளில் வாள் மற்றும் கோடாரியுடன் திரிவதாகவும், இந்த குழுக்களிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக அண்மையில் நோன்பு பெருநாள் நாளன்று இசை நிகழ்ச்சி ஒன்றினை பார்வையிட்டு வீடு திரும்பிய வேளையில், ஒரு குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கிலேயே ஒரு குழுவினர், குறித்த சிறுவனை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் மரத்தில் தலைகீழாக கட்டி ஆடைகளை கலைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை கடத்தி சென்று தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று (15) திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வீடியோ காட்சி ஆதாரத்தை வைத்து தாக்குதல் நடத்திய அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் தலைமறைவாகி உள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
