இலங்கைக்கு வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களால் அனுப்பப்படும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களில் குவைத் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
“அத தெரண பிக் ஃபோகஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, ஆண்டுதோறும் சுமார் 80,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக குவைத்துக்கு பயணிப்பதாகவும், இது நாட்டின் மொத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு புறப்பாடுகளில் சுமார் 30 சதவீதமாக இருப்பதாகவும் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் குவைத்திலுள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு 893 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாகவும், இதன் மூலம் தொழிலாளர் பணப் பரிமாற்றங்களில் குவைத் தனிநாட்டாக அதிக பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பணப் பரிமாற்ற வருவாயில் கத்தார் இரண்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு இராச்சியம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளை, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவும் முக்கிய பங்களிப்பாளர்களாக தொடர்கின்றன.
மேலும், இத்தாலி, பிரித்தானியா, மாலைத்தீவு, அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களும் பணப் பரிமாற்றங்களின் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
தொழிலாளர் பணப் பரிமாற்றங்கள் ஆண்டுதோறும் இலங்கைக்கு பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டித் தருவதுடன், நாட்டின் முக்கிய அந்நியச் செலாவணி ஆதாரங்களில் ஒன்றாகவும் தொடர்ந்து விளங்குகின்றன.
