தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
சுற்றறிக்கை வெளியீடு: அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை வெளியிடுதல்.
முப்படைகளின் கண்காணிப்பு: முப்படைகளின் பங்களிப்புடன் விசேட கண்காணிப்புப் பிரிவொன்றை நிறுவுதல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குதல்.
சமூகக் குழுக்களின் பங்களிப்பு: பிரதேச மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘பிரஜா சக்தி’ மற்றும் பொதுப் பாதுகாப்பு குழுக்கள் ஊடாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துதல்.
தற்போது பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அதிகளவில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவ்விடங்களை இலக்கு வைத்து அவசர நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதன் அவசியத்தை அதிகாரிகள் இங்கு வலியுறுத்தினர்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, மேலதிக செயலாளர் எஸ்.பி.சி சுசீஷ்வர உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, கொழும்பு மாநகர சபை மற்றும் முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
