தங்கக்கட்டிகள் மற்றும் தங்க நகைகளை எவ்வித அனுமதிப்பத்திரங்களும் இன்றி, சுங்கப் பிரிவினருக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே, விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் நேற்று காலை 06.30 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 18 இலட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபா பெறுமதியுடைய 271 கிராம் 480 மில்லிகிராம் எடையுடைய 12 தங்கச் சங்கிலிகள், 10 தங்கக் கைக்காப்புகள் மற்றும் 2 தங்கக் கட்டிகள் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட தங்கமும் இன்று காலை நைகந்த சுங்கத் தடுப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட முறையான சுங்க விசாரணைகளின் பின்னர், கடத்தி வரப்பட்ட தங்கம் முழுவதையும் அரசுடமையாக்குவதற்கும் , குறித்த பயணிக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதிப்பதற்கும் சுங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
