நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு, கொழும்பு ஐ.டி.எச் தொற்றுநோய் ஒழிப்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு அல்லாத பிற நோயாளர்களை முல்லேரியா வைத்தியசாலைக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களுக்கு கூடுதல் நேரத்தையும், தீவிர கவனத்தையும் செலுத்தி சிகிச்சையளிப்பதற்காகவே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை வரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,143 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 47 ஆக அதிகரித்துள்ளது. இம்மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள்ளேயே 11,764 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
முன்னதாக ஜூன் மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 21,538 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
ஒட்டுமொத்த நோயாளர்களில் 52.76 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய அங்கு 35,427 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 10,512 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,681 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 13,795 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 13,563 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் 175 சுகாதார பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிக அவதானம் மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
