‘டித்வா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைப்பதற்கு அரசாங்கம் உரிய முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த இந்த மனு, நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், குடியரசுத் தலைவர் சார்பில் சட்டமா அதிபர், அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு திணைக்களம் ‘டித்வா’ புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
