மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னர், தமக்கு பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக ஈ.பி.டி.பி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கான உணவுப் பொருட்கள் கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் கொண்டு செல்லப்பட்டதாக தாம் ஊடகங்களில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, மாநகர சபை அதிகாரிகள் தமது வீடு, வர்த்தக நிலையம் மற்றும் சொத்துகள் உள்ள இடங்களில் சோதனை நடத்தி அச்சுறுத்தியதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் தம்மை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை என குற்றம்சாட்டிய அவர், எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடிபணியப் போவதில்லை என்றும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமக்கு எதிராக பொய்யான முறைப்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெறுவதாகவும், அவற்றை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
