ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று (23) வியாழக்கிழமை காலை பெரிய மரமொன்று வீதியில் முறிந்து விழுந்துள்ளது.
இன்றைய தினம் காலை 6:10 மணியளவில், பாடசாலைச் சிறுவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கமான காலை நேரப் பயணங்களில் ஈடுபட்டிருந்த நெரிசல் மிக்க வேளையிலேயே இம்மரம் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.
வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஹட்டன் பொலிஸார் ஆகியோர் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் கூட்டுச் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத் தீவிர போராட்டத்திற்குப் பின்னர் வீதியில் விழுந்த மரம் முழுமையாக அகற்றப்பட்டு, அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்து தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
