தென் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், இரு நாடுகளிலும் இதுவரை 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்பெயின் தலைநகர் மத்ரித்துக்கு மேற்கே மூன்று இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ ஒன்றிணைந்து பெரும் தீப்பரவலாக மாறியதால், அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
மத்ரித் பகுதியில் சுமார் 25,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மேலும் 40,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், வரலாற்றுச் சிறப்புமிக்க எல் எஸ்கோரியல் நகரை நோக்கி காட்டுத்தீ பரவுவதைத் தடுக்க, ஸ்பெயின் இராணுவத்தின் அவசரகாலப் படையினர் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
