கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீனப் பிரஜைகளையும் 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று சீனப் பிரஜைகள் மீன்பிடிப்பதற்காக கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு சென்றிருந்த போது, மற்றொரு சீனப் பிரஜைகள் குழுவினர் தாக்குதல் நடத்தி ஒருவரை கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட சீனப் பிரஜையின் சடலம் எஹெலியகொட, கரந்தனை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் கைவிடப்பட்டிருந்த வேன் ஒன்றிலிருந்து ‘எயர் பிஸ்டல்’ ஒன்றும், சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் காரொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சீனப் பிரஜைகளுக்கு இடையிலான மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
