இலங்கையின் 1990 சுவசெரிய இலவச அவசர அம்புலன்ஸ் சேவை தனது 10ஆவது ஆண்டு நிறைவை இன்று (ஜூலை 28) கொண்டாடுகிறது.
2016ஆம் ஆண்டு காலி முகத்திடலில் முதல் அம்புலன்ஸ் வாகனம் சேவையில் இணைக்கப்பட்டதன் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது நாட்டின் முக்கியமான மற்றும் மக்களால் அதிகம் விரும்பப்படும் பொது சேவைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உள்ளிட்ட சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுவசெரிய சேவை நாளொன்றுக்கு சுமார் 1,000 அவசர அழைப்புகளுக்கு பதிலளிப்பதுடன், தினமும் சுமார் 30,000 கிலோமீற்றர் தூரம் பயணித்து மக்களுக்கு சேவை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஆரம்ப கட்டமாக 23 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கிய இந்திய மக்களுக்கும் ஹர்ஷ டி சில்வா நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், 13 நிமிடங்களுக்குள் சராசரியாக முழுமையான மருத்துவ வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை சேவையை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லும் அளவுக்கு சுவசெரியா வளர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவசெரிய சேவை எதிர்கால தலைமுறைகளுக்கும் தொடர்ந்து மக்களுக்கு உயிர்காக்கும் சேவையை வழங்க வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
