ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்கு வைத்து சவுதி அரேபியா துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM உடன் ஒருங்கிணைந்து புதன்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் மற்றும் ரியாத் பகுதிகளில் உள்ள எண்ணெய் நிலையங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் ஈராக்கிலிருந்து ஏவிய பல ட்ரோன்களை சவுதி வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் மோதலை விரும்பவில்லை எனவும், ஆனால் எதிர்கொள்ளும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிப்போம் எனவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈராக்கிய பிரதமர் அலி அல்-சைதி சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், ஈராக்கிய நிலப்பரப்பு பிற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான “இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் இன் ஈராக்” இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, சவுதியின் கூற்றுகள் பொய்யானவை என தெரிவித்துள்ளது.
