வத்தளை ஹேந்தலை தொழுநோய் வைத்தியசாலையை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வரலாற்று அருங்காட்சியகமாக பாதுகாத்து பராமரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில் பல பழமையான கட்டிடங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள் காணப்படுகின்றன.
சேதமடைந்து வரும் இக்கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை பாதுகாத்து அருங்காட்சியகமாக மாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
தொழுநோய் தற்போது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய நோயாக மாறியுள்ளதாலும், எதிர்காலத்தில் நிரந்தர நோயாளிகள் இங்கு தங்க வேண்டிய அவசியம் குறைவதாலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இங்கு பழைய டச்சுக் கால கட்டிடங்கள் மட்டுமன்றி, 1939ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதல் துணி துவைக்கும் இயந்திரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், தொழுநோயாளிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களும், மரணமடைந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட மர வண்டிகளும் இங்கு உள்ளன.
இந்நிலையைக் கள ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் அதிகாரிகள் குழுவொன்று வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.
