மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை, பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா – அட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை சென் கிளயர் நீர்வீழ்ச்சி பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறிந்து வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் பிரதேச மக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அட்டன் – நுவரெலியா மற்றும் அட்டன் – கொழும்பு பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், மலைப்பிரதேசங்களில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
