இலங்கையில் நடைபெறவுள்ள மிகப்பெரிய சர்வதேச ரக்பி போட்டிகளில் ஒன்றாக, ஆசியா பசிபிக் லயன்ஸ் அணியும் இங்கிலாந்தின் முன்னணி நார்தாம்ப்டன் செயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளன.
“Asia Pacific Lions vs Northampton Saints Tour of Sri Lanka 2026” சுற்றுப்பயணத்தின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு கொழும்பிலுள்ள City of Dreams வளாகத்தில் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கலந்துகொண்டார்.
பிரதான ரக்பி போட்டி ஆகஸ்ட் 28 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கொழும்பு ரேஸ்கோர்ஸ் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச ரக்பி வீரர்களும் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களுமான அரவிந்த டி சில்வா, மஹேல ஜயவர்தன, சாமிந்த வாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கும் தொண்டு நோக்கிலான T20 கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு கொழும்பு CCC மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சித் தொடரில் சமூக ரக்பி பயிற்சி முகாம்கள், பயிற்சியாளர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இளைஞர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளன.
இந்த நிகழ்வு இலங்கையை விளையாட்டு சுற்றுலா துறையில் முன்னணி நாடாக உருவாக்க உதவுவதுடன், உலகத் தரமான ரக்பி போட்டிகளை உள்நாட்டு ரசிகர்கள் நேரில் காணும் வாய்ப்பையும் வழங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
அத்துடன், இந்த முயற்சி இலங்கையில் ரக்பி விளையாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் சர்வதேச விளையாட்டு மதிப்பையும் மேலும் உயர்த்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
