நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்களை போன்று மேலும் இரண்டு அல்லது மூன்று சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கிடைத்த தகவல்கள் சிறைச்சாலைகள் திணைக்கள பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் ஒரு அலை போல பரவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, எவ்வித சூழ்நிலை உருவெடுத்தாலும், உயிர்ச்சேதங்களைக் குறைத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கு இடையிலான போதைப்பொருள் தொடர்பான தகராறு என்றபோதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் கைதிகளால் நிர்வாகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஒன்று என அமைச்சர் கூறினார்.
எனவே மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம், சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.
