மலையக மக்களுக்கு வழங்கப்படும் தபால் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (04) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவைகளை வலுப்படுத்துதல், சீரான தபால் விநியோகத்தை உறுதிப்படுத்துதல், புதிய தபால் ஊழியர்களை நியமித்தல் மற்றும் தற்போது பணியாற்றும் தபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல் மற்றும் கிட்ணன் செல்வராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
