பனை சார்ந்த தயாரிப்புகளுக்கான புதிய சந்தை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தேசிய கண்காட்சியொன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பனை அபிவிருத்தி சபை நிறுவப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டும், உள்நாட்டு பனை சார்ந்த தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சி, ஆகஸ்ட் 07ஆம் திகதி வவுனியா நகர சபை மைதானத்தில் ஆரம்பமானது.
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
பனை சார்ந்த உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பனைத் தொழிலில் புதிய முதலீடுகளை ஈர்த்தல், உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் பனை தயாரிப்புகளுக்கான தேவையை விரிவுபடுத்துதல் ஆகியவை கண்காட்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
கடந்த ஆண்டு பனை சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் 675 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் காணப்பட்டாலும், அவற்றின் பொருளாதார மற்றும் உற்பத்தி ஆற்றலில் சுமார் 50 சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
