பதுளை மாவட்ட வைத்தியசாலைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், புதிய அம்பியூலன்ஸ்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய அம்பியூலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (11) பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதற்காக மொத்தம் 181.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஐந்து புதிய அம்பியூலன்ஸ்களை கொள்வனவு செய்வதற்காக 123.9 மில்லியன் ரூபாயும், நவீன மருத்துவ உபகரணங்களுக்காக 57.6 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் தியத்தலாவை, வெலிமடை, பண்டாரவளை, கொஸ்லந்த மற்றும் லுணுகலை ஆரம்ப வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
