அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் வரலாற்றில் முதல் முறையாக 40 டிரில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இந்தக் கடன் அளவு மிக விரைவாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், கடுமையான கடன் வாங்குதல், அதிகரித்த செலவினங்கள் மற்றும் குறைந்த வரிகள் போன்ற காரணங்களால் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற நெருக்கடிகளால், அமெரிக்க அரசாங்கம் அதிகளவில் கடன் வாங்கிச் செலவிட நேரிட்டது.
வயதான மக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் உடல்நலப் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அதற்கு ஏற்ப வரி வருவாய் உயரவில்லை.
இந்தநிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுதோறும் சுமார் 1.1 டிரில்லியன் டொலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் இந்தக் கடன் சுமை எதிர்காலத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வரியுயர்வு போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசைத் தள்ளக்கூடும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
