ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரமான வகையில் செயற்படுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குளியாப்பிட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
போலியான பல வாக்குறுதிகளினால் நாட்டு மக்களை ஏமாற்றிய அரசாங்கம், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தொடர்ந்து பொய்,மோசடி, ஊழல் மற்றும் அடக்குமுறைகள் மூலம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.
அடக்குமுறையால் இந்த நாட்டு மக்களைத் தடுக்க முடியாது. 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதத்தை எதிர்கொண்டவர்கள். சவால்களை எதிர்கொண்டவர்கள். ஆகவே கிராமத்து மக்கள் அடக்குமுறைக்குப் பயப்பட மாட்டார்கள்.
ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகளை ஆராய்வதற்கு முன்னர் ஜனாதிபதி தனது அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய வேண்டும்.
துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இதுவரையில் உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த மோசடி தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையான வகையில் உண்மையை வெளிப்படுத்தவில்லை.
கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்த விசாரணை குழு தவறான வகையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே தமது ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்படுகிறார்.
ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரமான வகையில் செயற்படுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் உடன் நடத்தலாம் என்றார்.
