வரலாற்றுப் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹர திருவிழாவின் 4ஆவது ரந்தோலி பெரஹர இன்று (26) நடைபெறுவதை முன்னிட்டு, விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான தலதா மாளிகை எசல பெரஹர 28ஆம் திகதி வரை நடைபெறும் நிலையில், விசேட பாதுகாப்பு நடைமுறைகள், கட்டுப்பாடுகள், வீதித் தடைகள், வாகனங்களை சோதனையிடுதல், பொதுமக்கள் மீதான கண்காணிப்பு, சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டல்கள், வாகன தரிப்பிட வசதிகள் என பல்வேறு நடவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்டி வீதியை பயன்படுத்துகின்றவர்கள் மாற்று வழிப்பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போக்குவரத்துக்கான மாற்றுப் பாதைகள்
கண்டி நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பல்வேறு திசைகளிலிருந்தும் நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களுக்கான மாற்றுப் பாதை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து செல்லும் வாகனங்கள் :
கனரக வாகனங்கள்: மஹையாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தியை அடைந்து கண்டி நகருக்குள் செல்லலாம்.
இலகுரக வாகனங்கள்: டி.எஸ். சேனாநாயக்க வீதி, குறுக்கு வீதி, மற்றும் யட்டிநுவர வீதி வழியாக வந்து, வலதுபுறம் திரும்பி மீரமக்காம் பள்ளிவாசல் அருகே இடதுபுறமாகச் சென்று திலக் ரத்நாயக்க மாவத்தையைப் பயன்படுத்தலாம்.
வெளியேறும் வாகனங்கள்: கண்டி நகரத்திலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹையாவ திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
தென்னேகும்புர மற்றும் அம்பிட்டியவிலிருந்து செல்லும் வாகனங்கள்:
நகருக்குள் நுழைய: சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்தியை அடைந்து, எஹாலேபொல குமாரிஹாமி மாவத்தையின் ஊடாக வலதுபுறம் திரும்பி போகம்பரை புகையிரத நிலைய பகுதிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகருக்குள் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் திரும்ப வேண்டும். புவியியல் வரைபடங்களை ஆராய்வது
மேலும், ராஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து இருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட்டுள்ள தேவாலயம் வீதி (Church Street) வழியாகவும் நகருக்குள் நுழைய முடியும்.
நகரத்திலிருந்து வெளியேற :
கடிகாரக் கோபுர சுற்றவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாக சென்று, குயின்ஸ் ஹோட்டல் பக்கவாட்டு வாயில் கடந்து, படகு சேவைக்கு முன்னால் உள்ள சங்கராஜ மாவத்தையைப் பயன்படுத்தலாம்.
மாற்றுப் பாதையாக, போகம்பரை சுற்றவட்டத்திலிருந்து எஹாலேபொல குமாரிஹாமி மாவத்தை, ராஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி மற்றும் சங்கராஜ மாவத்தை வழியாகவும் அம்பிட்டிய, தென்னேகும்புர மற்றும் தெல்தெனிய நோக்கிச் செல்லலாம்.
கொழும்பிலிருந்து கண்டி நகருக்குச் செல்வதற்கு :
கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழைவதற்கும், நகரத்திலிருந்து கொழும்பு நோக்கி வெளியேறுவதற்கும் வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதி ஆகிய இரண்டு பிரதான வீதிகளையுமே இருவழிப் போக்குவரத்தாகப் பயன்படுத்த முடியும்.
