வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவின் ‘தீர்த்தோற்சவம்’ இன்று (28) காலை கோட்டம்பையிலுள்ள மகாவலி கங்கையில் முறைப்படி நடைபெற்றது.
எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று வியாழக்கிழமை (27) சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, நாத, விஷ்ணு, கதரகம மற்றும் பத்தினி ஆகிய நான்கு பிரதான தேவாலயங்களின் ஊர்வலங்கள், பாரம்பரிய சமயச் சடங்குகளை நிறைவேற்றுவதற்காகத் தத்தமது தேவாலயங்களைச் சென்றடைந்தன.
அதன் பின்னர், கட்டுகெலே வீதி வழியே பயணித்து கோட்டம்பை மகாவலி கங்கையை நோக்கிச் சென்றடைந்தன.
அங்கு வழக்கமான தீர்த்தோற்சவச் சடங்குகள் நிறைவடைந்ததும், ஊர்வலம் கண்டி கணதேவி கோவிலை நோக்கிச் சென்று, பின்னர் அஸ்கிரிய கெடிகே ரஜமஹா விகாரையை அடைந்தது.
இதனைத் தொடர்ந்து, பகல் பெரஹரா இன்று பிற்பகல் 2.18 மணிக்கு வடக்குத் திசையை நோக்கி அஸ்கிரிய கெடிகே ரஜமஹா விகாரையிலிருந்து புறப்படவுள்ளது.
இந்த ஊர்வலம் டி.எஸ். சேனாநாயக்க வீதி, பன்சல வீதி மற்றும் தேவ வீதி வழியாகப் பயணித்து, ராஜா வீதியை அடைந்து ஸ்ரீ தலதா மாளிகை சதுக்கத்தைச் மூன்று முறை வலம் வரவுள்ளது.
ஊர்வலத்தின் நிறைவில், புனித தாதுக்கள் பிற்பகல் 4.01 மணிக்கு வடக்குத் திசையை நோக்கி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் எழுந்தருளப்பண்ணப்படும்.
பெரஹரா நிறைவடைந்ததும், தியவதன நிலமே மற்றும் நான்கு தேவாலயங்களின் பாஸ்நாயக்க நிலமேக்கள் இணைந்து ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாகச் செல்வார்கள்.
அங்கு, எசல பெரஹரா விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.
அதன்பின்னர், பெரஹரா ஊர்வலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்குக் கௌரவ விருதுகள் வழங்கப்பட்டு, இவ்வாண்டிற்கான கண்டி எசல பெரஹரா விழா உத்தியோகபூர்வமாக நிறைவடையும்.
