தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி, தாங்கிக்கொள்ள முடியாத வேலைச்சுமை மற்றும் பணிசார் அழுத்தம் காரணமாகத் தனது கடமை இடத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகளவிலான பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை இனிமேலும் தாங்கிக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு, குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் தகவல் பதிவேட்டில் குறிப்பொன்றை எழுதிய பின்னரே இவ்வாறு வெளியேறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்கிஸ்ஸ பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க குணசேகர, கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த அதிகாரியின் இந்தச் செயலானது, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர், தெஹிவளை வீதிப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி மற்றும் அதற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் தற்போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
