ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வு நாளை திங்கட்கிழமை (07) சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் பங்கேற்கவிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ இது குறித்துக் குறிப்பிடுகையில், இம்முறை வெளிவிவகார அமைச்சர் ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் பங்கேற்க மாட்டார் என்றும், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர இராஜதந்திரத் தூதுக்குழுவே இந்த அமர்வை முழுமையாகக் கையாளும் என உறுதிப்படுத்தினார்.
மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிக்கையை மையப்படுத்தி உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் கூடிய பொது விவாதமும் நடைபெறவுள்ளது. குறிப்பாக, சர்வதேசத்தின் கடுமையான கவனத்தைப் பெற்றுள்ள யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சமூகத்தின் கரிசனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் சில முக்கிய உள்நாட்டு நகர்வுகளைத் துரிதப்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்தல்.
ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ திகதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விரைவுபடுத்துதல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய புதிய நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்துதல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டிருந்தது.
கடந்த காலங்களில், குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை, சட்ட அமுலாக்கம் சார்ந்த சர்வதேச விமர்சனங்களின் தொடர்ச்சியாகவே தற்போதைய சர்வதேச நகர்வுகள் பார்க்கப்படுகின்றன.
இருப்பினும், கடந்தகால வடுக்களுக்கு நீதி வழங்குதல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தங்கள் நிலவிய போதிலும், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் எந்தவொரு வெளிநாட்டு அல்லது சர்வதேச தலையீடுகளுடனான இணைந்த விசாரணைப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
சர்வதேசத் தலையீடு என்ற எல்லை மீறலை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் அதேவேளை, நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமே நாட்டின் நல்லிணக்கத்தையும் நீதியையும் நிலைநிறுத்த முடியும் என்பதை வெளிவிவகார அமைச்சு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
