இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் முதன் நிகழ்வாக, நேற்றைய தினம் மாலை 6 மணியளவில் கொழும்பிலுள்ள நட்ஷத்திர ஹோட்டலொன்றில் இலங்கை வாழ் இந்திய பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
அதன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மாலை கங்காரம விகாரையில் விசேட மத வழிபாடுகளிலும் பங்கேற்கவுள்ளார். பின்னர் நாளை வியாழக்கிழமை காலை நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிதையம்மன் கோவிலுக்கும் விஜயம் செய்யவுள்ளார். நுவரெலியா விஜயத்தின் பின்னர் அவர் தனது விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன . முதலாவது ஒப்பந்தம், இலங்கை மற்றும் இந்திய தேசிய மாணவர் படைப்பிரிவுகளுக்கு (National Cadet Corps) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். இதன் மூலம் இரு நாட்டு மாணவர் படையினருக்கு இடையே பரஸ்பர பயிற்சிகளை வழங்குதல் மற்றும் கூட்டு வேலைத்திட்டங்களில் ஈடுபடுதல் போன்றவை சாத்தியமாகும்.
இரண்டாவது ஒப்பந்தம், இலங்கையிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் (National Defence College) டெல்லியிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். ஏற்கனவே இவ்விரு நிறுவனங்களும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனுபவப் பகிர்வு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் .
மூன்றாவது ஒப்பந்தமானது, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான வான் பாதுகாப்பு ஆயுதங்களை இலவசமாகப் பராமரித்துத் தருவது தொடர்பானது. 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக ’40mm L/70′ ரக 24 வான் பாதுகாப்பு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன.பயண வழிகாட்டிகளைப் படி
அவற்றில் 18 ஆயுதங்களுக்கான பராமரிப்புப் பணிகள் ஏற்கனவே இந்தியாவினால் இலவசமாகச் செய்து தரப்பட்ட நிலையில், எஞ்சியிருந்த 6 ஆயுதங்கள் பராமரிக்கப்படாமல் இருந்தன. தற்போது எஞ்சியுள்ள அந்த 6 ஆயுதங்களையும் இந்திய அரசாங்கமே தனது செலவில் பெங்களூரிலுள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஊடாக இலவசமாகப் பராமரித்து வழங்குவதற்கான ஒப்பந்தமே கையெழுத்தாகவுள்ளது.
விசேட போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கொழும்பில் நேற்று முதல் நாளை வியாழக்கிழமை வரை விசேட போக்குவரத்துத் திட்டத்தை இலங்கை பொலிஸார் நடைமுறைப்படுத்தவுள்ளனர். அமைச்சரின் வாகனப் பேரணி செல்லும் பாதைகளில் தற்காலிக போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் திருப்பங்களும் விதிக்கப்படும் என்றும், தேவைக்கேற்ப மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் திட்டத்தின்படி, இன்று புதன்கிழமை முற்பகல் 9.50 மணி முதல் முற்பகல் 11.25 மணி வரை, தங்குமிடத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலான பாதையிலும், மீண்டும் திரும்பு பயணத்தின் போதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பின்னர் பிற்பகல் 2.00 மணி முதல் அமைச்சரின் திட்டமிடப்பட்ட பயணங்களின் போது மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இரவு 7.00 மணி முதல் இரவு 7.10 மணி வரை திட்டமிடப்பட்ட பயணத்திற்காக விடுதியிலிருந்து செல்லும் பாதையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். நாளை வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் முற்பகல் 9.10 மணி வரை அமைச்சரின் புறப்பாட்டின் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
வாகனப் பேரணியின் நகர்வுகளுக்கு ஏற்ப இக்கட்டுப்பாடுகள் அவ்வப்போது இடைவெளிகளுடன் விதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட பொலிஸார், குறித்த வீதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு வாகன சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
