அமெரிக்கப் பெண்களை இலக்காகக் கொண்டு இணையவழி காதல் மோசடியில் ஈடுபட்டு 6 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஆறு நைஜீரியர்கள், தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவுள்ளனர்.
2021ஆம் ஆண்டு கேப் டவுனில் கைது செய்யப்பட்ட இவர்களை, அமெரிக்காவின் அமெரிக்கப் புலனாய்வுத் துறை(FBI) மற்றும் அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு(Secret Service) அதிகாரிகளிடம் தென்னாப்பிரிக்க அதிகாரிகள் ஒப்படைக்கவுள்ளனர்.
இவர்கள் பிளாக் ஆக்ஸ்(Black Axe) எனப்படும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட பெண்களை போலியான இணையவழி காதல் உறவுகள் மூலம் ஏமாற்றியதாகவும், அவர்களில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் வர்த்தகர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இவர்களுக்கு மின்னணு மோசடி (wire fraud) மற்றும் பணமோசடி (money laundering) தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் குற்றமற்றவர்கள் என சட்டரீதியாகக் கருதப்படுவர்.
