இலங்கையிலிருந்து அமெரிக்கத் தபால் சேவைக்கு (USPS) அனுப்பப்பட்ட 625,000 டொலர் நிதி அந்நிறுவனத்திற்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இணையவழி மோசடி (Cyber Fraud) மூலம் 2.5 மில்லியன் டொலர் திறைசேரி நிதி திசைதிருப்பப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த நிதி விவகாரம் தொடர்பாக காவல்துறை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் தபால் திணைக்களம் ஆகியன இணைந்து சமாந்தர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த நிதிப் பரிமாற்றங்கள் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
“இலங்கை தரப்பிலிருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமக்கு அந்த நிதி கிடைக்கவில்லை என அமெரிக்கத் தபால் சேவை எமக்கு அறிவித்துள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விசாரணைகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
இது தவிர, அரச மட்டத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய முறைகேடுகள் குறித்தும் தனித்தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
திறைசேரி நிதி மோசடிக்கும் இதற்கும் தொடர்புள்ளதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது, ஆனால் இது குறித்த விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” என அவர் பதிலளித்தார்.
