ஹோமாகம, கலகாஹேன பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து நேற்று (16) அதிகாலை மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர். ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர ஊழியராக பணியாற்றிய அவர், பகுதி நேரமாக ஆன்லைன் செயலி மூலம் வாடகை மோட்டார் சைக்கிள் சேவையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி மாலை வாடகைச் சவாரிக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், பின்னர் காணாமல் போன நிலையில், அவரது சடலம் கால்வாயொன்றில் இருந்து மீட்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் காணியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உயிரிழந்தவரின் காலணிகள் மற்றும் 20 ரூபாய் பணத்தாள் உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொலையாளிகள், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
