கதிர்காமம் புனித தலம் மற்றும் மாணிக்க கங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் அற்ற வலயங்களாக மாற்றும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஐந்தாண்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
‘பொலித்தீன் அற்ற புனித வலயங்கள் – 2030’ என்ற பெயரில் இந்தத் திட்டம், 2026 ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் கீழ், பக்தர்கள், பிரதேச மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பிளாஸ்டிக் பாவனையை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், தடை செய்யப்பட்ட பொலித்தீன் பொருட்களுக்கு எதிரான கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.
மேலும், வழிபாட்டுத் தலங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் மேம்பட்ட கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெற்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
