நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் தஹால் “பிரசந்தா”, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவை பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தில் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்னெடுத்த அரசியல் பயணம் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல், அரச மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஊழல் ஒழிப்பு மற்றும் சலுகைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கலாசாரத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது குறித்தும் இருதரப்பும் கலந்துரையாடினின.
அத்துடன், அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இச்சந்திப்பில் இந்திய மார்க்சிய அறிஞர் விஜய் பிரசாத், கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சின்யு லு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், சர்வதேச மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட ஜே.வி.பி பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
