நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை டெங்கு நோயினால் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இதுவரை 77,028 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகளில் நெருக்கடி நிலை உருவாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் 21 ஆம் திகதிவரை 21,650 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ஜூன் மாத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்,
மாகாண ரீதியில், மேல் மாகாணம் தொடர்ந்து டெங்கு பரவலின் மையப் பகுதியாக உள்ளது. இங்கு 40,573 டெங்கு நோளர்கள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹாவில் 16,164 டெங்கு நோளர்களும் கொழும்பில் 15,341 டெங்கு நோளர்களும் பதிவாகியுள்ளனர்.
தென் மாகாணத்தில் 11,867 டெங்கு நோளர்களும் , மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் தலா 6,000க்கும் மேற்பட்ட டெங்கு நோளர்களும் பதிவாகியுள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற சிறிய மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தபோதிலும், இந்நோய் நாடு முழுவதும் பரவியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
28 வது வாரக் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதிலும் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக அபாயம் கொண்ட பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
தினசரி நள்ளிரவுக் கணக்கெடுப்பின்படி சராசரியாக 2,652 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும், டெங்கு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் வைத்திய ஆலோசனைகளைப் பெறுமாறும் பொது சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைத் தொடர்ந்து கேட்டுக்கொள்கின்றனர்.
