இலங்கை சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோனின் நிதி கோரிக்கையை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், யுபுன் அபேகோன் இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பெருமை சேர்த்த திறமையான வீரர் என்றும், கடந்த சில மாதங்களாக அவருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
எனினும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாய்மொழியாக வழங்கியதாகக் கூறப்படும் 300,000 அமெரிக்க டொலர் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு யுபுன் கோரியுள்ளதாகவும், அத்தகைய கொடுப்பனவை அரசாங்கத்தால் வழங்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“மிஷன் ஒலிம்பிக்” திட்டத்தின் கீழ் வீரர்களின் செயல்திறன் மற்றும் தரவரிசையை அடிப்படையாகக் கொண்டே நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், முன்னாள் அமைச்சர் ஒருவர் வழங்கியதாகக் கூறப்படும் வாய்மொழி வாக்குறுதியின் அடிப்படையில் பணம் வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, யுபுன் மீண்டும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், தற்போதைய கொள்கைகளுக்கு அமைவாக தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
