கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றில் தரம் 05 மாணவிகள் வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த மாணவியின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
வகுப்பாசிரியரால் பிரம்பால் தாக்கப்பட்டதில் ஒரு மாணவி சுகயீனமடைந்து சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திடம் வகுப்பு மாற்றம் கோரிய நிலையில், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், பின்னர் மாணவியின் தாயாரான ஆசிரியருக்கு பாடசாலை தரப்பில் அழுத்தங்கள் வழங்கப்பட்டதாகவும், மாணவி மற்றும் குடும்பத்தினர் தொடர்பில் அவதூறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், கல்வி அமைச்சு, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடுகள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகளின் போது, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், அதன் பின்னர் ஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
